Pages

Saturday, January 2, 2010

ஸ்ரீ கிருஷ்ணகவசம்

எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! 70

திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு. 78

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கவுரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கவுரவம் காக்கக் கண்ணா வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன். 86

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று ! 94

உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்ல
கண்ணனில் லாமல் காலமு மில்லை
கண்ணனில் லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால் 102

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க ! 110

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல் 118

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழ்ங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு ! 126

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்க 134

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம் ! 142

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய

No comments:

Post a Comment